16.கொஞ்சம் அறிவியல் கொஞ்சம் கதை

#அறிவியல்
புத்தகம் ..கொஞ்சம் அறிவியல் ,
கொஞ்சம் கதை. ஆசிரியர்... என் சொக்கன் 
பதிப்பகம்.. மதி நிலையம் 
சென்னை 86 .
044-28111506.

சில வருடங்களுக்கு முன்பு வேலூரில் புத்தக கண்காட்சியில் வாங்கிய புத்தகம். குமுதம், கோகுலம், முத்தாரம், சூரியக்கதிர் போன்ற புத்தகங்களில் வெளிவந்த கதை/ கட்டுரைகளின் தொகுப்பு .கட்டுரைகள் என்பதைவிட கதைகள் என்றே சொல்லலாம். அவ்வளவு சுவாரசியமாக விஞ்ஞானிகளின் வாழ்வில் நடந்த சிறுசிறு சம்பவங்களின் மூலம் அவர்களை அறிமுகப் படுத்துகிறார்  ஆசிரியர். 

பள்ளி நாட்களில் ஆர்க்கிமிடிஸ் தத்துவத்தை அறிமுகப்படுத்தும்
போது 'யுரேகா' என்று ஓடிய சம்பவத்தை கூறாத அறிவியல் ஆசிரியர்கள் இருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன் .இதே வகையில் கோப்பர்நிக்கஸ் சார்லஸ் டார்வின் , அச்சு எந்திரத்தை கண்டுபிடித்த குட்டன்பர்க், மின்காந்தப் புலத்தை வகுப்பறையில் கண்டுபிடித்த ஹன்ஸ் ஓர்ஸ்டட்,
'பேக்லைட் 'என்ற பிளாஸ்டிக் தொழில்நுட்பம் கண்டுபிடித்த லியோ, பேராசிரியர் யஷ்பால்,
பாராசூட் கண்டுபிடித்த செபாஸ்டியன், பில்கேட்ஸ், ஜெகதீஷ் சந்திரபோஸ், ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ,அணுவை முதன்முதலில் #அடோமாஸ்  என்று கண்டறிந்த ல்யூசிப்பஸ்,டெமோக்ரிடஸ் ...ஆகியோரை குழந்தைகளுக்கு புரிந்து கொள்ளும் வகையில் எளிய சொற்றொடர்களால் அறிமுகப் படுத்துகிறார்.

#தள்ளாத மனமே வெல்லும் என்ற கட்டுரையில் சார்லஸ் டார்வின் தன் கண்டுபிடிப்புகளை எழுதி வெளியிடாம தள்ளிப் போட்டுக் கொண்டே இருந்தாராம். தன் கருத்துக்களை ஒட்டியே சிந்தித்த மற்றொரு விஞ்ஞானி வாலஸ்  தனக்கு எழுதிய கடிதத்தைப் படித்த பிறகுதான் தன் கோட்பாடுகளை வெளியிட்டு இருக்கிறார். எந்த வேலையையும் தள்ளிப் போடக் கூடாது என்பதற்காக இந்தக் கதையை கூறினாலும்... கண்டுபிடிப்புகள் சில நேரம் பல வருடங்கள் காத்திருந்து வெற்றி பெறும் என்பதற்கு
கார்னிங் நிறுவனம் கண்டுபிடித்த கண்ணாடி வகை ஒரு உதாரணம்.

எளிதில் உடையாத புதுமையான கண்ணாடி பலராலும் நிராகரிக்கப்பட்டது 1960-களில்.. 40 வருடங்கள் கழித்து செல்போனில் பயன்பாடு அதிகரித்த பிறகு, அந்த கண்ணாடி இப்போது சூப்பர் டூப்பர் ஹிட்.

#கிடைக்காத நோபல் கதையில்.. நியூக்ளியர் ஃபிஷன்  எனப்படும் அணுப்பிளப்பைக் கண்டறிந்தவர்கள் ஜெர்மன் விஞ்ஞானி ஓட்டோ ஹாஹ்ன் மற்றும் லிஸெ மெய்ட்னர்(பெண் விஞ்ஞானி).1939 ஆம் வருடம் அவர்களின் அணுப்பிளப்பு ஆராய்ச்சி முழுமை பெற்றது.1944 ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசை ஓட்டோ மட்டுமே பெற்றார் என்பது செய்தி.
#வேட்டை கதையில்.. வேட்டைக்குச் சென்ற விஞ்ஞானி மெஸ்ட்ரல் தன் நாய் ,உடைகளின் மீது ஒட்டிக் கொண்டிருந்த விதைகளை எடுத்து மைக்ராஸ்கோப் மூலம் ஆராய்ந்து , "சின்ன சின்ன கொக்கிகள் ஒன்றாகச்சேர்ந்தால் மிக வலுவான ஒரு பிணைப்பு கிடைக்கிறது"  என்று கண்டறிகிறார். இந்த தத்துவத்தை வைத்து கண்டுபிடிக்கப்பட்டதே இன்று உலகம் முழுக்க பயன்படுத்தும் #வெல்க்ரோ.

20 கட்டுரைகளுமே அறிவியல் உலகத்தினை அழகான கதைகளின் வடிவில் அறிமுகப்படுத்துகிறது. குழந்தைகளுக்குப் பரிசளிக்க ஏற்ற நூல்.

Comments

Popular posts from this blog

ஸ்டீபன் ஹாக்கிங் பார்வையில் கடவுள் உண்டா? _சுப.வீ

1.வானவில்...ந.க.தீப்ஷிகா

10. குழந்தைகளின் நூறு மொழிகள்-ச.மாடசாமி ஐயா